பிரபஞ்சத்தின் மையத்தில் அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும் ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில் ஶ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர்.
சந்தோஷம் பொங்கிப் பெருகிய வேளையில் சகல ஆன்மாக்களையும் ரக்ஷிக்க தேவி கருணை கொண்டாள். அதனால் ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1000 கூறும் பாடலும் உருவானது.
லலிதா என்றால் கொடி என்றும், வாக்கு, மனம், எழுத்து எதனாலும் எட்டமுடியாத அபூர்வ சக்தி என்றும் பொருள் கூறுவர். ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருளும் அளவிட முடியாத சக்தியும் கொண்டவை. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம்.
இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுவோருக்கு இகபர சுகங்கள் யாவுமே கிட்டும் என்கின்றன புராணங்கள். சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக குழந்தைப்பேறு, திருமண வரம், தோஷ நிவர்த்தி, உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும். சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஶ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி அதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள். மனமொன்றி இவள் திருநாமங்களை தினந்தோறும் சொல்லி வாருங்கள்; சகல நன்மைகளும் பெறுங்கள்.
Source of above explanation : Vikatan